மத்ரஸா மாணவர்கள் மரணத்துக்கு முப்படையினரே காரணம் – ஹக்கீம்

0
67

“காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்தில் உழவியந்திரம் வெள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அரபுக் கல்லூரி (மத்ரஸா) மாணவர்கள் உட்பட எட்டுப் பேர் உயரிழந்த துயரச் சம்பவமானது பொலிஸ் மற்றும் முப்படையினரின் அவதானக் குறைவினாலேயே நிகழ்ந்தது”- இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பில் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவுடன் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பு திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்த பாதிப்புகள் தொடர்பிலும் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

இதேவேளை, மாவடிப்பள்ளி பாலத்தில் உழவியந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் எட்டுப் பேர் உயரிழந்த துயரச் சம்பவமானது பொலிஸ் மற்றும் முப்படையினரின் அவதானக் குறைவினாலேயே நிகழ்ந்ததாக ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.

குறித்த பாலத்துக்கு மேலாக வெள்ளம் பெருக்கெடுத்த நிலையில் பாதையை மூடாமல் போக்குவரத்துக்கு அனுமதியளித்தமையானது பொறுப்பற்ற செயல்பாடாகும்.

உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு தாம் சென்றபோது அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து விசனம் வெளியிட்டதாகவும் ஹக்கீம் குறிப்பிட்டார்.

எனவே, இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இதேவேளை, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு துரிதமாக இழப்பீடு வழங்கப்பட வேண்டும் எனவும் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்தார்.
இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்தார்.

மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அவசர உதவிகள், நிவாரண நடவடிக்கைகள் மற்றும் அனர்த்த பாதிப்புகளை நிவர்த்தி செய்து இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் எனவும் ஆளுநரிடம் ஹக்கீம் வலியுறுத்தினார்.