மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தின் பணியை தாமதம் இன்றி முன்னெடுக்கக் கோரி, போராட்டம்

0
144

மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தின் 2ஆம் கட்ட பணிக்கு தொடர்ச்சியாக மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வரும் நிலையில், காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தின் 2ஆம் கட்ட பணிக்கு ஆதரவாக இன்றைய தினம் காலை 11 மணியளவில் மன்னாரில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் குறித்த போராட்டம் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட வேலையற்றோர் சங்கம் என்ற பெயரில் குறித்த போராட்டம் இடம்பெற்றது.

போராட்டத்தில் ஆண்கள் பெண்கள் என சுமார் 40 பேர் கலந்து கொண்டனர்.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளையும் ஏந்தி இருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள நடுக்குடா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், அடம்பன் பகுதியை சேர்ந்த ஒருவர் குறித்த போராட்டத்தை தலைமைதாங்கி முன்னெடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது.

நடுக்குடா உள்ளிட்ட பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தின் 2ஆம் கட்ட பணியை தாமதம் இன்றி முன்னெடுக்க வேண்டும் என்றும், அதனால் வேலை இல்லாத பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்த போராட்டக்கார்கள், பொது அமைப்புக்கள் தமது இலாப நோக்கத்துக்காகவே இத்திட்டத்திற்கு எதிர்ப்பை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் மகஜரை வாசித்த பின், போராட்டக்காரர்களிடம் ஊடகங்கள் கருத்து கேட்டபோது, எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்காது அவ்விடத்தில் இருந்து சென்றுவிட்டனர்.

இந்தநிலையில், காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தின் 2ஆம் கட்ட பணிக்கு ஆதரவாக மன்னாரில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டால் காற்றாலை மின் உற்பத்தி திட்ட பணியில் வேலை பெற்று தருவதாக கூறிய நிலையில், தாங்கள் கலந்து கொண்டதாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தின் 2ஆம் கட்ட பணிக்கு தொடர்ச்சியாக எதிர்ப்புக்கள் முன்னெடுக்கப்பபட்டு வருகின்ற நிலையில் ஒரு சிலர் தமது சுய இலாபத்திற்காக மக்களை ஏமாற்றி இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக சமூக செயற்பாட்டாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.