மன்னாரில் கேரள கஞ்சா மீட்பு!

0
176

மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலைமன்னார் பிரதான வீதியின் ஆடைத் தொழிற்சாலையின் பின் பகுதியில் உள்ள களப்பு பிரதேசத்தில் இன்று காலை ஒரு தொகுதி கேரளக் கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதோடு, 25 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருங்கண்டல் வண்ணாங்குளம் பகுதியைச் சேர்ந்த சந்தேக நபரிடமிருந்து 41 கிலோ 620 கிராம் கேரள கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த கேரளக் கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டன.

மன்னார் மாவட்ட பதில் கடமை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரபாத் விதானகேவின் பணிப்பில், மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ரத்நாயக, ரத்னமணல தலைமையிலான அணியினரே குறித்த கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சாவை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.