மன்னாரில், அண்மைக் காலங்களாக, சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் சுற்றித்திரிவதாகவும், சிறுவர்களை இலக்கு வைத்து, அவர்களை கடத்தும் நோக்கில், சிலர் மன்னார் மாவட்டத்திற்குள் ஊடுருவியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இன்று, குறித்த சம்பவம் தொடர்பாக, துரித விசாரணை முன்னெடுக்கப்பட்டதுடன், பொலிஸாரின் கவனத்திற்கும் கொண்டுவந்துள்ளதாக, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள பாடசாலை மாணவர் ஒருவரை, வாகனம் ஒன்றில் வந்தவர்கள் இனிப்பு பண்டங்களை வழங்கி, குறித்த மாணவரை பலவந்தமாக ஏற்றிச் செல்ல முயற்சி செய்யப்பட்டதாக, குறித்த மாணவர், தனது பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், குறித்த சம்பவம் தெரியவந்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக, மாணவன் கல்வி கற்கும் பாடசாலைக்குச் சென்று, இன்று காலை, மாணவனிடம் விசாரணைகளை மேற்கொண்டேன்.
இதன் போது, மேலும் ஒரு மாணவனை, இன்று காலை பாடசாலைக்குச் செல்லும் போது, இனிப்பு பண்டங்களை வழங்கி, வாகனத்தில் ஏற்ற முற்பட்டதாக தெரிவித்துள்ளார். இச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில், மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதோடு, பாடசாலை பகுதிகளில், விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளேன்.
இதனால், சந்தேகத்திற்கிடமான வாகனங்களின் நடமாட்டம் தெரிந்தால், உடனடியாக பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவாருங்கள்.என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் வலியுறுத்தியுள்ளார்.