மன்னாரில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடனாளிகளாக மாற்றம்

0
341

2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு கால வீட்டுத் திட்டங்கள் காரணமாக, மன்னார் மாவட்டத்தில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள், கடனாளிகளாக மாறியுள்ளன.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால், கடந்த 2018, 2019 ஆம் ஆண்டுகளில், ‘செமட்ட செவன’ மாதிரி செயற்திட்டம் மூலம் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத் திட்டத்தின் ஊடாக, மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 3 ஆயிரத்து 22 குடும்பங்களில், சில குடும்பங்கள் பகுதியளவிலும், பல குடும்பங்கள் முழுமையாகவும், கடனாளிகளாக மாறியுள்ளன.
மன்னார் மாவட்டத்தில் உள்ள, மிகவும் பின்தங்கிய குடும்பங்களை, முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்து, நேரடி கள வியத்தின் ஊடாக, 2018, 2019 ஆம் ஆண்டுகளில், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினர் மற்றும் பிரதேச செயலகங்கள் இணைந்து, வீட்டு திட்ட பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு, 5 இலட்சம் மற்றும் 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வீட்டுத் திட்டத்திற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
அதனடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள், தங்கள் தற்காலிக குடிசை வீடுகளையும் உடைத்து, கல் வீடு கட்டும் கனவில், அவசர அவசரமாக, அடிக்கல் நாட்டும் பணிகளை முன்னெடுத்திருந்தனர்.
தேசிய வீடமைப்பு அதிகார சபை, நிபந்தனையின் அடிப்படையில், வீடுகளின் நிர்மாணத்திற்கு அமைய, 8 விதமாக வரையறுத்து, பகுதி பகுதியாக, அவர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்குவதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டிருந்தது.
வீட்டுக்கான அடித்தளம், அடித்தளம் முடிவுறுத்தப்படல், ஜன்னல் அளவு, லின்றர் அளவு, கூரை பூர்த்தி என, 8 அளவிடையை கொண்டு, கொடுப்பனவுகள் செலுத்தப்படும் என, வீட்டுத் திட்ட பயனாளிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, வீட்டு திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
ஆனால், வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 3 வருடங்கள் கடந்துள்ள நிலையில், பல குடும்பங்கள், அத்திவாரம் அமைப்பதற்கு உரிய பணம் கிடைக்காத நிலையில், கடனாளிகளாக, கடன் சுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.
கல் வீடு கட்ட வேண்டும் என்ற கனவிலும், தேசிய வீடமைப்பு அதிகார சபையின், 6 மாத காலத்திற்குள் வீட்டை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நிர்பந்தனையிலும், இருந்த நகைகளை அடகு வைத்தும், வட்டிக்கும் நுண் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்றும், வீடுகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையிலும், தேசிய வீடமைப்பு அதிகார சபையில் கொடுப்பனவு பெறாத முடியாத நிலையிலும், பல குடும்பங்கள், செய்வதறியாத நிலையில் வாழ்ந்து வருகின்றன.
அத்துடன், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, பொருட்களின் விலை ஏற்றம் என, நடுத்தர குடும்பங்கள் மற்றும் வறிய குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டு திட்டத்திற்காக பெற்ற கடன்களை செலுத்த முடியாத நிலையில், பல போராட்டங்களையும் சவால்களையும், வீட்டுத்திட்ட பயனாளிகள் அனுபவித்து வருகின்றனர்.
மன்னார் பிரதேச செயலக பிரிவில் மாத்திரம், சுமார் ஆயிரத்து 656 குடும்பங்கள், வீட்டுத் திட்டத்தினால் கடனாளிகளாக மாறியுள்ளனர்.
அத்துடன், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு பிரதேச செயலகங்களை சேர்ந்த 535 குடும்பங்கள், வீட்டுத் திட்டத்தினால் கடனாளிகள் ஆக்கப்பட்டுள்ளனர்.