மன்னார் நானாட்டான் பிரதேசத்தில், ‘கௌரவமான அரசியல் தீர்வு கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
‘கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ எனும் தொனிப்பொருளில், வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில், 100 நாட்கள் நடைபெறுகின்ற செயல் திட்டத்தின் 49 ஆவது நாள் கவனயீர்ப்பு போராட்டம், வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில், மன்னார் நானாட்டான் பிரதேசத்தில், இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்டத்தில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் இணைந்து, நிரந்தரமான அரசியல் உரிமை வேண்டும் என வலியுறுத்தினர்.
எங்கள் நிலம் எமக்கு வேண்டும், நடமாடுவது எங்கள் உரிமை,
பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை, ஒன்றுகூடுவது எங்கள் உரிமை என, கோஷங்களை எழுப்பிய மக்கள், தங்களின் உரிமை கோரிக்கையையும் முன்வைத்தனர்.
இதில், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவன பணிப்பாளர் யாட்சன் பிகிராடோ, நானாட்டான் பிரதேச சபை உப தவிசாளர் லூர்துநாயகம் புவனம், பிரதேச சபை உறுப்பினர் சிறி, சட்டத்தரணி, கிராம மட்ட அமைப்புகள், விவசாய, மீனவ சங்கங்கள், பெண்கள் அமைப்புகள், சிவில் சமூக அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு பணியாளர்கள் பங்கேற்றனர்.
மக்களால், 100 நாள் செயற் திட்டத்திற்கான பொது மகஜர் வாசிக்கப்பட்டதுடன், வருகை தந்த பொது மக்களுக்கு, அரசியல் தீர்வு திட்டம் மற்றும் 13 ஆம் திருத்த சட்டம் தொடர்பான, சாதக பாதக விளைவுகள் தொடர்பாக, தெளிவுபடுத்தல் வழங்கப்பட்டது.
அதேநேரம், அரசியல் தீர்வு விடயத்தில், மக்களின் கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான கருத்துக்களும் உள்வாங்கப்பட்டது.