மன்னார் பேசாலை கடற்கரையில் இருந்து, கடந்த 20 ஆம் திகதி, மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர், இன்று காலை, சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட மீனவர், கிளிநொச்சிப் பகுதியை சேர்ந்தவர் என்பதுடன், தற்போது பேசாலை பகுதியில் வசித்து வரும், இளம் குடும்பஸ்தரான, 26 வயதுடைய கஸ்டார் அலெக்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி கோணாவில் யூனியன் குளம் பகுதியைச் சேர்ந்த கஸ்டார் அலெக்ஸ், இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார். இவர், பேசாலையில் குடும்பத்துடன் தங்கி இருந்து, கடந்த சில மாதமாக, மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்.
இவ்வாறான நிலையில், கடந்த 20 ஆம் திகதி, பேசாலை கடற்கரை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, படகு மூலம், அன்றையதினம் மாலை 3.00 மணியளவில், மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளதுடன், இவருடன், மேலும் இரண்டு மீனவர்களும் சென்றுள்ளனர்.
அவர்கள், மீன் பிடி தொழிலில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில், இவர்களது தொழிலை மேற்கொள்ளும் றோலர் படகின் பிரதான வலை கிழிந்த நிலையில், அதை சீர் செய்து, மீண்டும் தொழிலில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில், அவர்கள் மேற்கொண்ட தொழிலில், மீன்பாடு இல்லாத நிலையில், இரவு சுமார் 9.30 மணியளவில், பேசாலை கரைக்கு திரும்பி, கடற்கரைக்கு சற்று தொலைவில், படகை நங்கூரமிட்டு, 3 மீனவர்களும், நீந்தி கரைக்கு வந்துள்ளனர்.
இதன் போது, ஒருவர் தாமதமாகியும் கரைக்கு வராத நிலையில், காணாமல் போயுள்ளார். குறித்த நேரத்தில், அவரை தேடிய மற்றைய இரண்டு மீனவர்களும், உரிமையாளரிடம் முறையிட்டு, பேசாலை பொலிஸ் நிலையத்தில், முறைப் பாட்டையும் பதிவு செய்துள்ளனர். அந்தவகையில், காணாமல் போன மீனவரின் சடலம், இன்று காலை, பேசாலை மீன்பிடி துறைமுகத்திற்கு மேற்கு பக்கமாக கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, இவருடன் தொழிலுக்கு சென்ற இரண்டு நபர்கள் மற்றும் அவரது மனைவி, உறவினர்கள், தொழில் உரிமையாளர் ஆகியோரிடம், பேசாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சடலம், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.