மன்னார் உயிலங்குளம் பகுதியில் விசாரணைக்கு சென்ற பொலிசார் மீது தாக்குதல் மேற்கொண்டதாக குறிப்பிடப்படும் பெண்கள் உட்பட 10 பேரை, எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நேற்றுமுன்தினம் மாலை உயிலங்குளம் மதுபானசாலை அருகில் சிலர் கலவரத்தில் ஈடுபட்டதாக, உயிலங்குளம் பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து, உயிலங்குளம் போலிசார் உயிலங்குளம் மதுபானசாலைக்கு சென்று விசாரணை செய்துள்ளனர்.
இதன்போது அவ்விடத்தில் கலவரத்தில் ஈடுபட்ட நபர்கள் சிலரை, பொதுமக்கள் அடையாளம் காட்டியதையடுத்து, பொலிஸார் கலவரத்தில் ஈடுபட்டவர்களை விசாரணை செய்ய முற்பட்ட போது அவ்விடத்தில் நின்ற சிலர் பொலிசாரை தாக்கியுள்ளார்கள்.
தாக்குதலில் காயமடைந்த பொலிசார் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், சந்தேக நபர் ஒருவர் அன்றையதினம் கைது செய்யப்பட்டதுடன், தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டதாக கூறப்படும் சந்தேக நபர்கள் 9 பேர் நேற்று உயிலங்குளம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, சந்தேக நபர்களை மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போது சந்தேகநபர்களை எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.