மன்னார் மெசிடோ நிறுவனம், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, சுயதொழிலை மேம்படுத்தும் வகையில் உதவி

0
219

மன்னார் மெசிடோ நிறுவனத்தினால், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, இன்று, மூன்றாவது கட்டமாக, உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், சுயதொழிலை மேம்படுத்தும் வகையில், ஒரு தொகுதி கோழிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

மன்னார் மாவட்டத்தில் உள்ள, மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய 5 பிரதேசச் செயலக பிரிவுகளையும் உள்ளடக்கி, மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள, பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உள்ளடங்களாக 180 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு, தொடர்ச்சியாக 3 மாதங்களுக்கு தேவையான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டு வந்தது.

அத்துடன், 3 மாதம் நிறைவு பெறும் போது, அவர்கள் விரும்பிய சுயதொழிலை மேற்கொள்ள, சுமார் 15 ஆயிரம் ரூபா பெறுமதியான சுயதொழில் மூலப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், இன்று, 30 பயணாளிகளுக்கு, 3 ஆம் கட்ட உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், அவர்கள் சுயதொழிலை மேற்கொள்ள, 15 ஆயிரம் ரூபா பெறுமதியில், கோழிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

மன்னார் மெசிடோ நிறுவனத்தில், இன்று மதியம் இடம்பெற்ற நிகழ்வில், மன்னார் மெசிடோ நிறுவன பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ, விற்றோல் திட்டத்தின் வடக்கு மாகாண கண்காணிப்பு இணைப்பாளர் எஸ்.ஏ.ரெக்ஸ் மற்றும் மெசிடோ நிறுவன பணியாளர்கள் பங்கேற்று, உதவித் திட்டத்தை வழங்கி வைத்தனர்.