இந்திய அரசின் நிதிப் பங்களிப்புடன், மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் நிர்மாணிக்கப்படவுள்ள, 10 ஆயிரம் வீட்டுத்திட்ட பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், அதற்கான இணக்கப்பாடு, இன்று, அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் எட்டப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தின் ஆரம்ப கட்டமாக, ஆயிரத்து 300 வீடுகளை அமைப்பதற்கான பணிகள், ஓரிரு வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்திய அரசின் உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ள, 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் தொடர்பில், அனைத்து பங்குதாரர்களுக்கும் இடையிலான சந்திப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில், இன்று இடம்பெற்றது.
கொழும்பு பத்தரமுல்லையில் உள்ள, நீர் வழங்கல் அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரன், இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் சத்யன்ஜல் பாண்டே, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எஸ்.சமரதிவாகர, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதிய தலைவர் பாரத் அருள்சாமி, பெருந்தோட்ட கம்பனிகளின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள், முகாமைத்துவ பணிப்பாளர்கள், இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் உட்பட அதிகாரிகள், பெருந்தோட்ட அமைச்சின் அதிகாரிகள், நிதி அமைச்சின் மேலதிக செயலாளர்கள், தேசிய வீடமைப்பு அதிகார சபை மற்றும் இலங்கை பொறியியலாளர் கூட்டுத்தாபன பணிப்பாளர் நாயகங்கள் என பலர் பங்கேற்றனர்.
வீடுகளை நிர்மாணிப்பதற்கான இடங்களை அடையாளம் காணும் பணி, ஏற்கனவே நிறைவு பெற்றுள்ள நிலையில், காணி உரிமையை வழங்குவதற்கு, பெருந்தோட்ட கம்பனி தரப்பிலும் இணக்கம் வெளியிடப்பட்டது.
எனவே, 10 பேர்ச் காணி உரிமையுடன் – சகல உட்கட்டமைப்பு வசதிகளையும் உள்ளடக்கிய வகையில், வீட்டு திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு வருகை தந்தபோது, மலையக மக்களுக்கான 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டது.
அப்போது, ஒரு வீட்டுக்கு சுமார் 10 லட்சம் ரூபா மதிப்பிடப்பட்டது.
எனினும், கொரோனா பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால், வீட்டுத் திட்ட பணிகள் தாமதமாகின.
இந்த நிலையில், தற்போதைய சூழலில், ஒரு வீட்டுக்கு சுமார் 28 இலட்சம் ரூபா தேவைப்படும் நிலையில், இது தொடர்பில், இந்திய அரசுடன் பேச்சு நடத்தி, அதற்கான அனுமதியையும், அமைச்சர் ஜீவன் தொண்டமான் பெற்றுக்கொடுத்துள்ளார்.