மானிய விலையில் கோதுமை மா வழங்கும் திட்டம் ஆரம்பம்!

0
183

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ரமேஷ்வரன் தலைமையில், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மானிய விலையில் கோதுமை மா வழங்கும் திட்டம் இன்று, நுவரெலியா – வட்டகொடை மடக்கும்புர தோட்டத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கூட்டுறவுச் சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் பாவனையாளர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன கலந்து கொண்டார்.
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 80 ரூபா விலையில் மாதாந்தம் 15 கிலோ கோதுமை மாவை வழங்குவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் எடுத்திருந்தது. இதற்கு கடந்த வாரம் அமைச்சரவை அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே குறித்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதன்போது 71 குடும்பங்களுக்கு இந்த கோதுமை மா வழங்கப்பட்டது.
அடுத்த கட்டமாக எதிர்வரும் காலங்களில் ஏனைய தோட்டங்களுக்கும் கோதுமை மா வழங்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஷ்வரன், தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் செயலாளர், நுவரெலியா மாவட்ட செயலாளர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவர் அனுஷியா சிவராஜா, முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள், கொட்டகலை, நுவரெலியா, அக்கரப்பத்தனை, நோர்வூட் ஆகிய பிரதேச சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகள், கட்சி முக்கியஸ்தர்கள், அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.