மாவீரர் கனவு நிறைவேறும் வரை நினைவுகூரலை தடுக்க முடியாது- முன்னணி அமைப்பாளர் சுரேஷ்

0
849

எம் இனத்தின் மீது அடக்குமுறை கூடக்கூட எமது மக்களின் உணர்வுகளும் பலமடங்காகக் கூடிச்செல்லும். அதன்படி எம் மாவீரர் கனவு நிறைவேறும் வரைக்கும் எங்களுடைய போராட்டங்களையும், எமது நினைவுகூரல் நிகழ்வுகளையும் யாரும் தடுக்க முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்தார்.

மாவீரர் நிகழ்வு தொடர்பிலான நீதிமன்றத் தடையுத்தரவு மற்றும் வாகரை பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டமை தொடர்பில் அவர்; இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:


வடக்கு – கிழக்கிலுள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்களால் கண்காணிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. நாங்கள் வருடாவருடம் எமது மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த மாவீரர் துயிலுமில்லங்களை அப்பிரதேச மக்களுடன் இணைந்து துப்புரவு செய்து வருகின்றோம்.

அந்த அடிப்படையிலே இவ்வருடமும் வடக்கு கிழக்கிலே உள்ள தமிழ் மக்கள் தங்களின் உறவுகளை, மாவீரர்களை நினைவுகூருவதற்கான பணிகளை ஆரம்பிக்கின்ற வேளை பொலிஸார், இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்து நீதிமன்றத் தடையுத்தரவால் தடுத்தும் வருகின்றனர்.

நேற்று முன்தினம் வாகரை மாவீரர் துயிலுமில்லத்தின் நிலைப்பாடு தொடர்பில் அறிய நான் அங்கு சென்றேன். அவ்வேளை துயிலுமில்லத்தைச் சூழ பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு அங்கு யாருமே செல்லமுடியாத ஒரு நிலை காணப்பட்டது.

இருப்பினும் நான் அங்கு சென்று வருகின்ற வழியில் என்னை மாங்கேணியில் வைத்து வாகரைப் பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். இனிமேல் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கக் கூடாது, மக்களைத் தூண்டக்கூடாது என்றவாறு கடுமையான தொனியில் மிரட்டினர். பின்னர் இரவு 8 மணியளவில் என்னை விடுவித்தனர்.

கெடுபிடிகள் மூலம் என்னை அடக்கலாம் ஆனால், எம் மக்களின், எம் இனத்தின் உணர்வை அடக்க முடியாது. எங்களது உணர்வுகளைத் தடுக்கத் தடுக்க மீண்டும் மீண்டும் உங்கள் மீது, உங்கள் இராணுவத்தின் மீது, அரசாங்கம் மற்றும் ஜனாதிபதியின் மீது சர்வதேச அழுத்தங்கள் கூடுமே தவிர என்றும் குறையாது. எங்களை அடக்கி ஒடுக்க முற்படுவது முட்டாள்தனமான வேலை.

எங்களைப் பொருத்தவரையில் எத்தடைகள் வந்தாலும் வருடம் தோறும் எங்களுக்காக உயிர் நீத்தவர்களை நாங்கள் பூசிப்போம், அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம், அவர்களை நினைவுகூருவோம் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை எனத் தெரிவித்தார்.