கம்பஹா கலகெடிஹேன பிரதேசத்தில், தேசிய மக்கள் சக்திக்கு முட்டை வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் முறையான பாரபட்சமற்ற விசாரணைகளை நடத்துமாறு சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பொலிஸ்மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸ் மா அதிபரிருக்கு கடிதம்மூலம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அதில் மேலும் குறிப்பிட்டுள்ள அவர்,
குறித்த பிரதேசத்தில் நேற்றைய தினம் தேசிய மக்கள் சக்திக்கு முட்டைவீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பரவலான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனவே இது தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட மாநாடு நேற்று (30) நடைபெற்றது.
இதன்போது தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க பயணித்த காரின் மீது முட்டை வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவரை கட்சியின் ஆதரவாளர்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.