எரிபொருள் கொள்வனவுக்கு புதிய கட்டுப்பாட்டை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விதித்துள்ளது. இதன்படி, இரு வாரங்களுக்கு ஒரு முறை மோட்டார் சைக்கிள்களுக்கு ஆயிரம் ரூபாய்க்கும், முச்சக்கர வண்டிகளுக்கு ஆயிரத்து 500 ரூபாய்க்கும் மட்டுமே பெற்றோல் விநியோகிக்கப்படும்.
இதேசமயம், கார், வான், ஜீப் உள்ளிட்ட வாகனங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே பெற்றோல் விநியோகிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுப்பாடு இன்று வெள்ளிக்கிழமை மதியம் முதல் நடைமுறைக்கு வரும் விதத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது.
எனினும், இந்த நடைமுறை டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு பொருந்தாது. மேலும், இந்தக் கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படுவதை பொலிஸ் மற்றும் பாதுகாப்பு பிரிவினருடன் அரச அதிகாரிகளும் கண்காணிப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, “மக்கள் தேவைக்கு மேலதிகமாக எரிபொருளை கொள்வனவு செய்வதன் காரணமாகவே வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகம் கட்டண அடிப்படையில் தற்காலிகமாக வரையறுக்கப்பட்டுள்ளது. 20 நாட்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது. இதனால், தட்டுப்பாடு ஏற்படாது”, என்று பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.