யாழில் உயர் குருதி அமுக்க நிலையம் இன்று திறப்பு

0
422

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயர் குருதி அமுக்க சிகிச்சை நிலையம் இன்று திறந்துவைக்கப்பட்டது.

விக்டோரியா வீதியிலுள்ள யாழ். போதனா வைத்தியசாலையின் புதிய கிளினிக் கட்டடத் தொகுதியில் இந்த சிகிச்சை நிலையம் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் திறந்து வைக்கப்பட்டது.

இருதய சிகிச்சை நிபுணர் பூ.லக்ஸ்மன் இந்த சிகிச்சை நிலையத்தை திறந்துவைத்தார்.

யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி, பொது மருத்துவ நிபுணர் பேராசிரியர் தி.குமணன் மற்றும் துறைசார் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மருத்துவப் பிரிவு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இருதய சிகிச்சைப் பிரிவு, சிறுநீரக சிகிச்சைப் பிரிவு, அகஞ்சுரக்கும் தொகுதிப் பிரிவு ஆகியவை இணைந்து யாழ்ப்பாணம் உயர் குருதி அமுக்க சிகிச்சை பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சிகிச்சை நிலையத்தின் முதல் பணிப்பாளராக யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட பேராசிரியர், பொது மருத்துவ நிபுணர் திருநாவுக்கரசு குமணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிதீவிர குருதி அமுக்கம், இளவயதில் குருதி அமுக்கம் போன்ற சிறப்புக் கவனிப்பு தேவையுள்ள நோயாளிகள் இந்த சிகிச்சைப் பிரிவால் சிகிச்சையளிக்கப்படுவார்கள்.

அத்தோடு இந்த சிகிச்சை நிலையம் மூலம் மக்களுக்கு உயர் குருதியமுக்கம் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் ஆராய்ச்சிப் பணிகளையும் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.