யாழில் நீண்ட நாள் சங்கிலி திருடர்கள் கைது!

0
198

யாழ்ப்பாணம் நீண்ட நாள்களாக பொலிஸாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த சங்கிலித் திருடர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களுக்கு எதிராக 40க்கும் மேற்பட்ட பிடியாணைகள் நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்டிருந்த போதும் – 60க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளநிலையிலும் பொலிஸாரால் சந்தேகநபர்களைக் கைது செய்ய முடியாதிருந்தது. இந்தநிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்றத் தடுப்புப் பிரிவினர் சந்தேகநபர்களை இன்று கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி நிஹால் பிரான்ஸிஸ் தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர்கள் பிரதீப், மேனன் மற்றும் கொன்ஸ்டாபிள்களான கவியரசன், புவனச்சந்திரன், சுயந்தன், சம்பத், அரஹம், அசாத், யோசப், பிரவீன், கரன்,ஜெயந்தன்,, பெண் பொலிஸ் கொன்ஸ்டாபிள் வர்ணகுலசூரிய ஆகியோரைக் கொண்ட குழுவே சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளது.

அண்மைக்காலமாக யாழ்ப்பாணம் மாவட்டம் முழுவதும் பெண்கள் மற்றும் வயோதிபர்களை இலக்கு வைத்து கத்தி காட்டி அச்சுறுத்திச் சங்கிலி அறுக்கும் சம்பவங்கள் அதிகரித்திருந்தன. இது தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவாகியிருந்த நிலையில், சந்தேகநபர்கள் கைது செய்யப்படவில்லை. அதையடுத்து யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் 42 மற்றும் 43 வயதான இரு சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். நாவற்குழி மற்றும் அல்வாயைச் சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதான சந்கேகநபரான சின்னவன் என்பவர் மீது 15 திறந்த பிடியாணைகளும், 8 பிடியாணைகளும் மற்றைய சந்தேகநபரான ஜெயா என்பவர் மீது 5 திறந்த பிடியாணைகளும், பருத்தித்துறை நீதிமன்றில் 10 பிடியாணைகளும், உயர் நீதிமன்றில் ஒரு பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தன.

சந்தேகநபர்களிடம் இருந்து கோப்பாய் பகுதியில் வழிப்பறிக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றும், நெல்லியடியில் திருடப்பட்டு வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் கோப்பாய், நெல்லியடி, கொடிகாமம் ஆகிய இடங்களில் வழிபறி செய்யப்பட்டது என்று நம்பப்படும் 3 சங்கிலிகளும் மீட்கப்பட்டுள்ளன.

அதேநேரம், சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நகைக்கடை உரிமையாளர் ஒருவரும் பெண் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நுட்பமான முறையில் மோட்டார் சைக்கிள்களைத் திருடி, வீதியில் செல்லும் பெண்களிடம் வழிப்பறி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்றும், கடந்த 3 மாதங்களாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நடந்த வழிப்பறிக் கொள்ளைகளுடன் இவர்களுக்குத் தொடர்பு உண்டு என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேககநபர்களுக்கு எதிராகப் பல்வேறு பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தபோதும், பொலிஸார் சந்தேகநபர்களைக் கைது செய்யாதிருந்தமை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வழிப்பறிக் கொள்ளைகள் நடைபெறக் காரணமாக இருந்துள்ளது.

விசாரணைகள் யாழ்ப்பாணம் மாவட்ட விசேடக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஏனைய பொலிஸ் நிலையப் பொலிஸாரால் ஏன் இதுவரை சந்தேகநபர்களைக் கைது செய்ய முடியாது இருந்துள்ளது என்று பொதுமக்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.