யாழ். கொடிகாமத்தில் வீதியால் சென்ற இளைஞன் மீது வன்முறைக்குழு தாக்குதல்

0
133

யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெள்ளாம்போக்கட்டி, ஜே – 323 கிராம அலுவலர் பிரிவில், நேற்று பிற்பகல், வீதியால் சென்ற இளைஞன் மீது தாக்குதல் நடத்திய வன்முறைக் குழு, குறித்த இளைஞனின் வீட்டிற்குச் சென்று, உடமைகளை அடித்து நொறுக்கியதுடன், வீட்டில் இருந்த நகை, பணம் போன்ற பெறுமதியான பொருட்களையும் அபகரித்துச் சென்றுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான இளைஞன், தனது நண்பனுடன் மோட்டார் சைக்கிளில், வீடு நோக்கிச் சென்றபோது, வெள்ளாம்போக்கட்டி சீலன் வீதி பகுதியில் வழிமறித்த குழு, இளைஞன் மீது தாக்குதல் நடத்தியதுடன், இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிளையும் அடித்து சேதப்படுத்தியுள்ளது.

தாக்குதலில் இருந்து தப்பித்த இளைஞன், அருகில் உள்ள வீடு ஒன்றில் தஞ்சம் புகுந்த நிலையில், வன்முறைக் கும்பல், அந்த வீட்டின் முன்பாக பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்களையும் அடித்து சேதப்படுத்தியுள்ளது.

அதனைத்தொடர்ந்து, வெள்ளாம்போக்கட்டி பகுதியில் உள்ள இளைஞனின் வீட்டிற்கு சென்ற குழு, வெளிக்கதவு, கண்ணாடிகள், தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட பொருட்களை அடித்து சேதப்படுத்தியதுடன், வீட்டில் வைக்கப்பட்டிருந்த 7 இலட்சம் ரூபா பணம் மற்றும் நகைகள் ஆகியவற்றையும் அபகரித்துச் சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பில், கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து, பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எனினும், காயமடைந்த இளைஞர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.