யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் தனியார் பேருந்து சாரதிகள், நடத்துநர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து சேவைகளையும் முன்னெடுக்க வேண்டாம் என போராட்டத்தில் ஈடுபட்ட தனியார் பேருந்து சாரதிகள், நடத்துநர்கள் தெரிவித்தனர்.
இதனால் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்துகளும் சேவையில் ஈடுபட முடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டிருந்தது.
சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்தனர்.
இதேவேளை, சம்பவ இடத்திற்குச் சென்ற வட மாகாண ஆளுநர் பி.ஸ்.எம். சார்ள்ஸ் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இன்று மாலை 6 மணிக்கு முன்பாக தீர்வு வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அதுவரை இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்துகளை சேவையில் ஈடுபட ஒத்துழைப்பு வழங்குமாறும் தனியார் பேருந்து சாரதிகள், நடத்துநர்களிடம் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் அங்கு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழில் முறையான பேருந்து தரிப்பிடம் இல்லை எனத் தெரிவித்த தனியார் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் நேற்று முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
யாழிலிருந்து வெளியிடங்களுக்குச் செல்லும் தனியார் பேருந்து சேவைகள் நேற்று நிறுத்தப்பட்ட நிலையில் இன்று வட மாகாணம் தழுவிய ரீதியில் தனியார் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
தனியார் போக்குவரத்து சேவைகள் மாகாண ரீதியில் முடங்கியுள்ளன.
இதனால் பாடசாலை மாணவர்கள், அலுவலகங்களுக்குச் செல்வோர், பயணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டள்ளனர்.
பேருந்து நிலையங்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தமையை அவதானிக்க முடிந்தது.