பொதுஜன பெரமுன மகிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிக்கவும், ராஜபக்ஷக்களை மீண்டும் பதவிகளில் அமர்த்தவும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பணிமனையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்திற்கு பொதுஜன பெரமுனவினர் வழங்கிய வாக்குகள் பெறுமதியற்றவை ஆகும். தத்தமது அதிகாரங்களைத் தக்கவைத்துக்கொள்வதற்காக மாத்திரமே அவர்களின் கைகள் உயர்த்தப்பட்டன. மக்களுக்காக அவர்கள் வாக்களிக்கவில்லை. மக்கள் ஆணைபெற்றவர்கள் இல்லாத தற்போதைய பாராளுமன்றம் செல்லுபடியற்றதாகவே காணப்படுகிறது. இவ்வாறான பாராளுமன்றமே நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்களை சட்டமாக நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், மக்கள் இதனை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. எனவேதான், இந்த பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்குச் செல்லுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தொடர்ந்தும் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம். ஆனால், மறுபுறம் மே தினக் கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பதற்கான கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. மே தினத்தை அடிப்படையாகக் கொண்டு பழைய தலைவர்களை மீண்டும் பதவிகளில் அமர்த்துவதற்கு பொதுஜன பெரமுன முயற்சித்து வருகிறது. ராஜபக்ஷர்களை மீண்டும் முன்னிலைப்படுத்தவே இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே மீண்டும் நாட்டின் தலைவரானால் அதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்’ என தெரிவித்துள்ளார்.