ராஜபக்ஷர்களை சந்தோசப்படுத்துகிறார் ரணில்: அனுர குமார திசாநாயக்க

0
211

மக்கள் போராட்டங்களை நசுக்கி, ஆட்சியை முன்கொண்டு செல்ல முடியாது என, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று, நுகேகொடையில் இடம்பெற்ற, தேசிய மக்கள் சக்தியின் பேரணியில் பங்கேற்று உரையாற்றிய வேளை, இவ்வாறு குறிப்பிட்டார்.
மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க, 134 பேரால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாக, ஆட்சி செய்கிறார்.
அவர், தம்மை தெரிவு செய்த, ராஜபக்சர்களை சந்தோசப்படுத்தும் செயற்பாடுகளையே மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு கட்டமே, கொழும்பு யூனியன் பிளேஸ் பகுதியில் வைத்து, அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் அமைதிப் பேரணியின் மீது, நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தாக்குதலாகும்.
எனினும், எமது பேரணி மீது ரணில் தாக்குதல்களை நடத்தினால், எமது பேரணி, நுகேகொடையில் நிறுத்தப்பட மாட்டாது. பேரணி விரிவுப்படுத்தப்படும்.
கடந்த சில மாதங்களாக இடம்பெற்ற போராட்டங்களின் போது கோரப்பட்ட, முக்கிய கோரிக்கைகளில், மோசடிக்காரர்களை நீதிக்கு முன் நிறுத்த வேண்டும் என்பது, முக்கிய கோரிக்கையாக இருந்தது.
இந்த நிலையில், தமது அதிகாரத்தை பயன்படுத்தி, தமது நண்பரான, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரனை, ரணிலால் இலங்கைக்கு அழைத்து வர முடியுமா?.
திவாலான நாட்டை, மற்றுமொரு நாடு காப்பாற்ற முடியாது.
இந்தியாவை பொறுத்த வரையில், அது, நட்பு ரீதியாகவே இலங்கைக்கு உதவி வருகிறது.
இந்த நிலையில், பெற்ற கடனை திருப்பி தர முடியாது என, சர்வதேசத்துக்கு அறிவித்த இலங்கை, சர்வதேச நாணய நிதியத்திடம் சென்று, அந்த கடனை, தாமதமாகி தருவதாக அறிவிப்பதை உறுதிப்படுத்தும் செயற் திட்டத்தையே முன்னெடுக்கிறது.
வேறு எந்த விடயமும், சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் இடம்பெறப்போவதில்லை.
என குறிப்பிட்டுள்ளார்.