ரொஹிங்கிய அகதிகளை நாடு கடத்திய பின்னணியில் இலங்கையர் கைது!

0
129

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ரொஹிங்கிய அகதிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, அகதிகளை சட்டவிரோதமாக நாடு கடத்த முற்பட்ட வலையமைப்பில் இலங்கையர் ஒருவரின் பங்களிப்பு இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. மியன்மாரில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு தொகை ரோஹிங்கியர்கள், பங்களாதேஷில் அகதி முகாமொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். பங்களாதேஷிலிருந்து இந்தோனேசியாவிற்கு சட்டவிரோதமாகச் செல்லும் நோக்கில் 104 ரோஹிங்கிய அகதிகள், படகு மூலம் புறப்பட்ட நிலையில், படகு பழுதடைந்து திசைமாறி இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைந்தது. வடமராட்சிக் கடற்பரப்பில் தத்தளித்த படகில் இருந்து அகதிகளை மீட்ட இலங்கைக் கடற்படையினர், காங்கேசன்துறை கடற்படை முகாமிற்குக் கொண்டு சென்று, மருத்துவ உதவிகளை வழங்கினர். சட்டவிரோத பயணம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சட்டவிரோதமாக அகதிகளை நாடு கடத்த உதவிய வலைப் பின்னலில் இலங்கையர் ஒருவரும் உள்ளடங்கியமை தெரியவந்தது. அவருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றில் பொலிஸாரால் வழக்குத் தொடரப்பட்டது. நேற்று மாலை அகதிகள் தங்க வைக்கப்பட்ட இடத்திற்கு நேரடியாகச் சென்ற மல்லாகம் நீதிவான் காயத்திரி சைலவன் விசாரணைகளை முன்னெடுத்தார். விசாரணைகளின் பின்னர், இலங்கைக் கடற்பரப்பில் மீட்கப்பட்ட வெளிநாட்டு அகதிகளை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையம் பொறுப்பேற்பதாயின், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளுமாறு கட்டளையொன்றையும் பிறப்பித்தார். அகதிகளின் நாடு கடத்தல் தொடர்பில் பொலிஸாரால் தொடுக்கப்பட்ட வழக்கிற்கு அமைய, சந்தேக நபரான இலங்கைப் பிரஜையை ஜனவரி 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மல்லாகம் நீதிவான் உத்தரவிட்டார்.