வடக்கில் இனி அனுமதியின்றி பனைமரம் வெட்டுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

0
357

வடக்கில் இனிவரும் நாட்களில் பனை மரத்தினை அனுமதியின்றி வெட்டுவோரை சட்ட நடவடிக்கைக்குட்படுத்தும் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிரிசாந்த பத்திராஜ தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்த வரை பனை மரத்தினை அனுமதியின்றிவெட்டுதல் தொடர்பான பெரியபிரச்சனை காணப்படுகின்றது.

எந்த பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியிலாவது பனை மரம் வெட்டப்படுகின்றது என முறைப்பாடு கிடைக்குமிடத்து உடனடியாக அந்த இடத்திற்கு பனை அபிவிருத்திசபையின் உத்தியோகத்தர்கள், அந்த பிரிவு போலீசார் மற்றும் அந்த பகுதி பிரதேச செயலர் பிரிவினுடைய உத்தியோகத்தர்கள் சென்று உடனடியாக அதனை தடுத்து நிறுத்தி கைது செய்து சட்ட நடவடிக்கை உட்படுத்தும் வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

அனுமதியின்றி பனைமரம் வெட்ட முடியாது என ஏற்கனவே சட்டம் உள்ளது எனினும் அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பிரச்சினை காணப்படுகின்றது. மிகவிரைவில் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அண்மையில் மிருசுவில் பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக பனைமரம் தறிக்கப்படுவதாக சபைக்கு முறைப்பாடு ஒன்று கிடைக்கப் பெற்றது. உடனடியாக பனை அபிவிருத்திச் சபையின் தலைவராகிய நான் அந்த இடத்துக்கு விஜயத்தினை மேற்கொண்டு போலீசாரையும் அழைத்து அதனை தடுத்து நிறுத்தினேன். இதைப்போல இனிவரும் காலங்களில் இவ்வாறு அனுமதியின்றி பனை மரத்தினை வெட்டுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நாம் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளோம். அத்தோடு பனைமரங்களை மேலும் பன் மடங்காக அதிகரிப்பதற்கு பனை மரம் நாட்டும் திட்டம் தொடர்பிலும் ஆராய்ந்து வருகின்றோம்.

எம்மைப் பொறுத்த வரைக்கும் வட பகுதியில் பனை வளம் நிறைந்து காணப்படுகின்றது. அந்த பனை வளத்தினை பாதுகாப்பதோடு மட்டுமல்லாது அந்த பனை வளத்தினை பாவித்து எமது சாதாரண விவசாய பெருமக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக சிறு கைத் தொழில் அபிவிருத்தி அமைச்சு பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. 
அந்த வேலைத் திட்டங்கள் இந்த வருட  பாதீட்டிற்கு பின்னர் அமுலுக்கு வரும் என எதிர்பார்ப்பதாகவும் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் தெரிவித்தார்.