வடக்கில் இன்று யாருக்கும் கொரோனா தொற்று இல்லை-மருத்துவர் கேதீஸ்வரன்

0
259

காரைநகரில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியுடன் நெருங்கிய தொடர்புடைய 43 பேரிடம் பெறப்பட்ட மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து காரைநகருக்குத் திரும்பிய ஒருவருக்கு கொரோனா வைரஸ்
தொற்றுள்ளமை கடந்த 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் சென்று வந்த இடங்களில் தொடர்புடையவர்கள் மறுநாள் (நவம்பர் 28) சனிக்கிழமை தனிமைப்படுத்தப்பட்டனர்.

கடந்த 21 ஆம் திகதி கொழும்பு வெள்ளவத்தையிலிருந்து காரைநகருக்கு வருகை தந்த அவர், 3 நாள்களுக்கு மேல் பல இடங்களுக்கு நடமாடிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை அவரது மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது.

அதனையடுத்து காரைநகர், சங்கானை மற்றும் யாழ். மாநகரம் ஆகிய சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் தொடர்புடையவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.

கொரோனா நோயாளியுடன் தொடர்புடைய 43 பேரிடம் நேற்று மாதிரிகள் பெறப்பட்டன. அவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.

அவர்களின் மாதிரிகள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது அவர்கள் எவருக்கும் தொற்றில்லை என அறிக்கை கிடைத்துள்ளது. காரைநகரில் தனிமைப்படுத்தப்பட ஏனையவர்களுக்கும் படிப்படியாக பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படும்.

இதேவேளை, யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடத்தில் வடமாகாணத்தைச் சேர்ந்த 70 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அவர்கள் அனைவருக்கும் தொற்றில்லை என அறிக்கை கிடைத்துள்ளது என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டார்.