வடக்கில் இன்று 7 பேருக்கு கொரோனா தொற்று

0
196

வடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் கொழும்புத்துறை – கச்சேரி தனியார் பேருந்து சேவை நடத்துநர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 379 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் 7 பேருக்கே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வலைப்பாடு மீன்வாடியில் தொழிலில் ஈடுபடும் அவர் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை – கச்சேரி தனியார் பேருந்து சேவையின் நடத்துநர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியா செட்டிக்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் மன்னார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த கர்ப்பவதி எனத் தெரிய வருகின்றது.

மற்றையவர் மன்னார் ஆடைத் தொழிற்சாலை பணியாளர். அவர் அறிகுறிகளுடன் மன்னார் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

அவருடன் பணியாற்றும் ஆடைத் தொழிற்சாலையில் 120 பேரிடம் இன்று மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டன.

அதில் ஒருவருக்கு மட்டும் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கூறினார்.