மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி எருக்கலம் பிட்டி பகுதியில், சுமார் 8 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன், மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், சுமார் ஒரு கிலோ 76 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன், சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான வகையில், மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனையிட்ட போது, போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டு, மோட்டார் சைக்கிளில் இருந்த இருவரால் கடத்தப்பட்டமை தெரிய வந்தது.
சந்தேக நபர்கள் இருவரிடம் இருந்து கிடைத்த மேலதிக தகவலின் அடிப்படையில், இந்த மோசடியில் ஈடுபட்ட மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், முச்சக்கரவண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் பெறுமதி, 8 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என கணிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள், மன்னார் மற்றும் பேசாலை பிரதேசத்தைச் சேர்ந்த, 21 மற்றும் 39 வயதுடையவர்கள் என தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், மன்னார் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.