வடக்கு மாகாண தைப்பொங்கல் விழா!

0
27

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில், வடக்கு மாகாண தைப்பொங்கல் விழா, இன்று காலை யாழ்ப்பாணம் – மாதகலில் நடைபெற்றது.

மாதகல் நுனசை முருகன் ஆலய வளாகத்தில், வட மாகாண அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகனும், சிறப்பு விருந்தினராக பிரதம செயலாளர் இளங்கோவனும், கௌரவ விருந்தினராக சண்டிலிப்பாய் பிரதே செயலாளர் சுபாஜினி மதியழகனும் கலந்து சிறப்பித்தனர்.

முதன்மை நிகழ்வாக ஆலய வளாக வயலில் இருந்து பாரம்பரிய முறைப்படி புதிரெடுத்து அதனை ஆலயத்திற்கு எடுத்து வந்து பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.

தொடர்ந்து ஆலய முன்றலில் எடுத்து வந்த நெல்லை உரலில் இடித்து அரிசியாக்கிய பின்னர் வடமாகாண ஆளுநர் சம்பிரதாய பூர்வமாக பொங்கலை ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்வில் 51 பொங்கல் பானைகளில் பொங்கல் இடம்பெற்றது.

தொடர்ந்து விருந்தினர்கள் பல்வேறுபட்ட கலை நிகழ்வுகளுடன் அழைத்து வரப்பட்டு பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட கலையரங்கில் கலைநிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது கலைமன்றங்களுக்கு இசைக்கருவிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

பாரம்பரிய விளையாட்டுக்களும் இடம்பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் வடமாகாண கலாசார அலுவல்கள் பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர், கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் கலைஞர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.