யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இரண்டாவது நாளாக இன்றும் கடற்படைக்கு காணி அளவிடும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றது.
தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை கடற்படைக்கு சுபீகரிப்பதற்காக நில அளவைத் திணைக்களம் யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்திருந்தனர்.
அவர்களை மறித்த காணி உரிமையாளர், கிராம மக்கள், அரசியல்வாதிகள் இது எங்களுடைய சொந்த காணி, இதனை அளவீடு செய்வதற்கு அனுமதிக்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து, நில அளவை அதிகாரிகளால் எழுத்து மூலமாக கடிதம் ஒன்றினை தருமாறு கூறப்பட்ட நிலையில் காணி உரிமையாளர், வடமராட்சி கிழக்கு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், காணி உரிமைக்கான மக்கள் இயக்க உறுருப்பினர் இரத்தினசிங்கம் முரளிதரன், வடமராட்சி கிழக்கு மக்கள் ஒன்றியத்தின் பிரதிநிதி, கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஆகியோர் ஒப்பமிட்டு கடிதம் வழங்கப்பட்டதையடுத்து, காணி அளவீடு செய்வதை நிறுத்திவிட்டு நில அளவைத் திணைக்களத்தினர் திரும்பிச் சென்றனர்.
இதேவேளை வடமராட்சி கிழக்கில் நேற்றிலிருந்து தொடர்ச்சியாக ஐந்து தினங்கள் கடற்படைக்கு காணி சுபீகரிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாகவும், சுவீகரீக்கப்படவிருக்கின்ற அனைத்து காணிகளும் தனியாருக்கு சொந்தமானது என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.