வட-கிழக்கிற்கு அதிக நிதியொடுக்கீடு தேவை என்கிறார் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான

0
183

எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் வடகிழக்கிற்கு விசேட நிதியொதுக்கீடுகளை செய்து விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.
ஜனாதிபதி மற்றும் விவசாய அமைச்சர் இணைந்து வடகிழக்கு தொடர்பில் விசேட கவனத்தினை செலுத்திவருவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விவசாய அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயும் கூட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்
நடைபெற்றது.
கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்
கோவிந்தன் கருணாகரம், மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள்,விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு,திருகோணமலை,அம்பாறை மாவட்டங்களில் விவசாய அமைச்சினால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தனித்தனிமாவட்டமாக ஆராயப்பட்டது.
அறுவடையின் பின்னர் நெல்கொள்வனவினை விவசாயிகளுக்கு ஏற்வாறான தொகையில் மேற்கொள்ளுதல், விவசாயிகளுக்கான நீர்பாய்ச்சல் குளங்களை புனரமைத்தல்,
உரத்தினை உரிய திகதிகளில் பெற்றுக்கொள்ளல், விவசாயிகளுக்கான காப்புறுதிகளை பெற்றுக்கொள்ளல், விவசாயிகள் விதைப்பு காலத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள்
என பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டது.