எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகTள்ள டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் திரு. சிவபாலசுந்தரம் அவர்கள் ஊடக அறிக்கை ஒன்றினை நேற்று வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில்,
‘இந்த ஆண்டும் பல மாவட்டங்கள் டெங்கு பரவலால் பாதிக்கப்பட்டுள்ளன. வட மாகாணத்தில் பருவப் பெயர்ச்சி மழைக்குப் பின்னர் டெங்கு தீவிரமாக பரவக்கூடிய அபாயம் உள்ளது.
பருவப்பெயர்ச்சி மழை ஆரம்பிக்க முன்னர், டெங்கு பரவும் இடங்களை இல்லாது ஒழிப்பதன் மூலம் டெங்கு பரவலை கட்டுப்படுத்த முடியும். எனவே வடமாகாண டெங்கு தடுப்பு செயலணி உப குழுவின் சிபாரிசின் அடிப்படையில் வடமாகாண பிரதம செயலாளர் அவர்களால், வடமாகாணத்தில் எதிர்வரும் 14.08.2023 இல் இருந்து 20.08.2023 வரையான காலம் டெங்கு கட்டுப்படுத்தல் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த வேலைத்திட்டமானது பின்வரும் கால அட்டவணையின் படி முன்னெடுக்கப்படவுள்ளது.
14.08.2023, 15.08.2023, 16.08.2023 ஆகிய திகதிகளில் வீடுகள், அரச/தனியார் திணைக்களங்கள், நிறுவனங்கள், வணக்கஸ்தலங்கள், கட்டட நிர்மாண பகுதிகள், உயர்கல்வி நிறுவனங்கள் என்பவற்றில் டெங்கு கட்டுப்பாட்டு சிரமதான பணிகளை முன்னெடுத்தல்.
17.08.2023 அன்று பாடசாலைகள், முன்பள்ளிகள், தனியார் கல்வி நிலையங்கள், சகல விதமான உணவு கையாளும் நிறுவனங்கள், தங்கு விடுதிகள், கடற்கரைகள் என்பவற்றில் டெங்கு கட்டுப்பாட்டு பணிகள் முன்னெடுத்தல்.
18.08.2023, 19.08.2023 ஆகிய திகதிகளில் அரச/தனியார் வைத்தியசாலைகள், வடிகால்கள், மயானங்கள், பொது இடங்கள், மைதானங்கள், பராமரிப்பற்ற காணிகள், வீடுகள் என்பவற்றில் சிரமதான பணிகளை முன்னெடுத்தல்.
20.08.2023 அன்று பிரதேச செயலக மட்டத்தில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுத்த செயற்பாட்டாளர்களையும் கிராமங்களையும் கௌரவித்தல்.
மேலே குறிப்பிட்டமைக்கு அமைவாக டெங்கு கட்டுப்பாடு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்பதுடன், வாரத்தில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சிறப்பாகவும் வினைத்திறனாகவும் முன்னெடுப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.