வவுனியாவில் அனுமதிக்கு முரணாக அமைந்துள்ள கட்டடம்! நகரசபை எச்சரிக்கை!!

0
48

வவுனியா புதிய பேருந்து நிலையத்துக்கு முன்பாகவுள்ள பீசா விற்பனை நிலையம் அமைந்துள்ள கட்டடம், அனுமதிப் பத்திரத்துக்கு முரணாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கட்டடத்தின் உரிமையாளருக்கு எதிராக வவுனியா நகர சபையால் எச்சரிக்கை அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.

அந்த அறிவித்தலில், நகர சபை கட்டளைச் சட்டங்களின் பிரகாரமும் நகரப் பகுதிக்குள் முன்னெடுக்கப்படும் கட்டடங்களின் அபிவிருத்தி தொடர்பாகவும் வவுனியா நகர சபையிடம் முறையான அனுமதி பெற்றிருக்கப்பட வேண்டும்.

எனினும், குறித்த ஆதனத்தில் நகர சபையால் கடந்த 2022 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட அனுமதிக்கு முரணாக கட்டடம் அமைக்கப்பட்டு வணிக ரீதியிலான நோக்கத்தில் இக் கட்டடம் இயங்குவதனால் அது தொடர்பில் குறிப்பிட்ட சில ஆவணங்களை நகர சபைக்கு சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டிருந்தது.

அந்தவகையில் திருத்திய வரைபடத்துக்கான கட்டட அனுமதி, அனுமதிக்கப்பட்ட வரைபடத்துக்கான குடிபுகு சான்றிதழ், சுற்றுச்சூழல் உரிமம், வியாபார உரிமம் ஆகியவற்றை 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு நகர சபையால் கோரப்பட்டிருந்தது.

எனினும், ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாத நிலையில் மீளவும் 7 நாட்களுக்குள் அந்த ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு நகர சபையின் செயலாளரால் அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.

குறித்த அறிவித்தலின் பிரகாரம் செயல்படத்தவறின் நகர அபிவிருத்தி அதிகார சபையின் திருத்தச் சட்டங்களின் பிரிவுகளை மீறி நகர சபையின் அனுமதிப் பத்திரத்துக்கு முரணாக கட்டடம் அமைத்து செயல்படுவதாக கருதி நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த பீசா விற்பனை நிலையத்தை அண்மையில் பார்வையிட்டிருந்த நகர சுகாதார பரிசோதகர் விற்பனை நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது சீரான முறையில் முகாமைத்துவம் செய்யப்படவில்லை எனவும் அதனை முறையாக மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.