வவுனியா மணிக்கூட்டுக் கோபுர சந்திக்கு அருகாமையில் புதிதாக நிறுவப்பட்ட ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் க.பத்மநாபாவின் சிலை, இன்று திறந்து வைக்கப்பட்டது.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினர் கே.அருந்தவராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முதன்மை அதிதியாக கலந்துகொண்ட கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், சிலைக்கு மலர் மாலை அணிவித்து சிலையை திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து ஏனைய முக்கியஸ்தர்கள், மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.
நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சிகளின் முக்கிஸ்தர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், முன்னாள் உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், இ.இந்திரராஜா, ம.தியாகராஜா, நகரசபை முன்னாள் தவிசாளர் இ.கௌதமன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.






