வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில், புகையிரத பாதையை மறித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, புகையிரத பாதை அமைக்கும் செயற்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
வவுனியா மதவுவைத்தகுளத்தில் இருந்து, ஏ9 வீதிக்கு செல்வதற்காக, மூன்றுமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள புகையிரத கடவையை, கடந்த 20 வருடங்களாக, சுமார் 350 குடும்பங்கள் பயன்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், தற்போது வடக்கு புகையிரத பாதையை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த புகையிரத கடவை ஊடாக கிராம மக்கள் செல்வதற்கு தடை ஏற்படுத்தும் முகமாக, புகையிரத பாதை அமைக்கும் நடவடிக்கை இடம்பெற்ற நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள், ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன் போது, நிரந்தர பாதை புனரமைப்பு பொறுப்பதிகாரி குணசிங்க, சம்பவ இடத்திற்கு விரைந்து, மக்களுடன் கலந்துரையாடிய போதும், இதற்கான தீர்வு கிடைக்கவில்லை.
இதனால், புகையிரத பாதை அமைப்பதற்கான இயந்திரம் தடுக்கப்பட்ட நிலையில், கிராம மக்கள், புகையிரத பாதையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.