வவுனியா மாநகர சபையின் முதல்வராக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை சேரந்த சுந்தரலிங்கம் காண்டீபன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.வவுனியா மாநகர சபை முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் வவுனியா மாநகரசபை ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.
இதன்போது முதல்வர் தெரிவு மற்றும் பிரதி முதல்வர் தெரிவுகள் பகிரங்க வாக்களிப்பின் மூலம் நடத்தப்பட்டது. இதன்போது தமிழரசுக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜனநாயக தேசிய கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவுடன் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியை சேர்ந்த காண்டீபன் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார்.
இதேவேளை தொழிலாளர் கட்சி, சுயேட்சைகளின் ஆதரவுடன் தேசிய மக்கள் சக்தியின் சிவசோதி சிவசங்கர் முதல் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார்.21 உறுப்பினர்களைக் கொண்ட வவுனியா மாநகர சபையில் காண்டீபன் 11 வாக்குகளை பெற்று மாநகர சபை முதல்வராக தெரிவு செய்யப்பட்டார்.எதிர்த்து போட்டியிட்ட சிவசோதி சிவசங்கர் 10 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து பிரதி முதல்வர் தேர்வு இடம்பெற்றது. இதன்போது ஜனநாயக தேசிய கூட்டணி சார்பில் போட்டியிட்ட பரமேஸ்வரன் கார்த்திபனுக்கு ஆதரவாக 11 வாக்குகளும், சுயேட்சைகுழுவை சேர்ந்த சிவசுப்பிரமணியம் பிரேமதாசுக்கு 10 வாக்குகளும் ஆதரவாக வாக்குகளும் அளிக்கப்பட்டன.இதனடிப்படையில் பரமேஸ்வரன் கார்த்திபன் பிரதி முதல்வராக தெரிவு செய்யப்பட்டார்.