வெடுக்குநாறிமலை விவகாரம் : கைதானவர்கள் வைத்தியசாலையில்

0
179

வவுனியா வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 8 பேரும், சட்ட வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு இன்று அழைத்துவரப்பட்டனர்.

குறித்த 8 பேரும் நேற்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

இதன்போது அவர்கள் மீது பொலிஸார் தாக்குதலை முன்னெடுத்தமையால் அவர்களது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக, அவர்கள் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து குறித்த 8 பேரையும் சட்டவைத்திய அதிகாரியிடம் முன்னிறுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட 08 பேரும் சிறைச்சாலைகள் திணைக்களத்தால் இன்றையதினம் வவுனியா சட்டவைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதேவேளை இன்று விடுமுறை தினம் என்பதால் சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் இல்லாமையால் வைத்தியசாலையில் வைத்து அவர்களுக்கான மாற்று ஆடைகள் வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

எனினும் சிறைக்காவலர்கள் அதற்கு அனுமதி வழங்காததால் கடந்த இரு தினங்களாக அவர்கள் கைதுசெய்யப்படும் போது அணிந்திருந்த ஆடைகளே அணிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.