2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பமாகி, பெப்ரவரி 17ஆம் திகதி நிறைவடையவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் இடையறாத மின் சேவையை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இலங்கை மின்சார சபை சாதகமான பதிலை வழங்கியுள்ளதாகவும், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். இம்முறை பாடசாலையூடாக 2 இலட்சத்து 78 ஆயிரத்து 196 பரீட்சார்த்திகளும், 53 ஆயிரத்து 513 தனியார் பரீட்சார்த்திகளுமாக 3 இலட்சத்து 31 ஆயிரத்து 709 பேர் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். அதற்கமைய, நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்து 200 பரீட்சை நிலையங்களும், 317 ஒருங்கிணைப்பு நிலையங்களும், 32 பிராந்திய சேவை நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன. கைதிகளுக்காக மெகசின் சிறைச்சாலையில் விசேட பரீட்சை நிலையமும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு மஹரகம வைத்தியசாலையில் விசேட பரீட்சை நிலையமும், விசேட தேவையுடைய மாணவர்களுக்காக ரத்மலானை, தங்காலை, கைதடி உள்ளிட்ட பிரதேசங்களில் விசேட பரீட்சை நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன எனவும், பரீட்சை நிலையங்களின் பாதுகாப்பிற்காக விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார். பரீட்சை தொடர்பில் வேறு ஏதேனும் சிக்கல்கள் காணப்படின், 1911 என்ற அவசர இலக்கத்துக்கு அல்லது 011-2784208, 011-2784537, 011-2785211 மற்றும் 011-2786616 என்ற இலக்கங்களுக்கு அழைத்து தெளிவுபடுத்தல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.