இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இராமேஸ்வரத்தை சேர்ந்த 5 இழுவைப்படகுகளுடன், 37 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இலங்கை கடற்பரப்பில், கடற்படையினர் நேற்று மாலையும், இன்று அதிகாலையும் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையில் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையிலான கடற்பரப்பில் 3 படகுகளுடன் 23 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இன்று அதிகாலை யாழ்ப்பாணம் – நெடுந்தீவுக்கு அருகில் மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் 2 இழுவைப் படகுகளுடன் வடக்கு கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 37 இந்திய மீனவர்கள் மற்றும் 5 மீன்பிடி இழுவை படகுகள் தலைமன்னார் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, தலைமன்னார் மற்றும் யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதகர்களிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.