இலங்கையில் ஏற்பட்ட நிதி நெருக்கடி நிலையின்போது 5 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார உதவிகளை வழங்கிய இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா சென்றுள்ள அநுரகுமார திஸநாயக்கவுக்கு டில்லியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து டில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பு குறித்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் அநுரகுமார கூறியவை,
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை எப்போதும் பார்த்திராத மிகக் கடுமையான பொருளாதார நடவடிக்கையை எதிர்கொண்டது.
இந்த புதைகுழியிலிருந்து வெளியே வருவதற்கு இந்தியா மிகப்பெரிய உதவியை வழங்கியுள்ளது.
குறிப்பாக, கடனில்லா கட்டமைப்பு நடைமுறையை செயல்படுத்தியது இலங்கைக்கு மிகப் பெரிய நிவாரணமாக அமைந்தது. 5 பில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 42,000 கோடி) மதிப்பிலான பொருளாதார உதவிகளை வழங்கிய இந்தியாவுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.
இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் மிக முக்கியமான இடத்தை இலங்கை பெற்றுள்ளது.
இலங்கை மண்ணிலிருந்து எந்த வகையிலும் இந்தியாவின் நலனுக்கு பாதகமாக செயல்பட எனது அரசு அனுமதிக்காது.
இலங்கையின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை பாதுகாப்பேன் என்று பிரதமர் மோடி எங்களுக்கு முழு ஆதரவையும் வழங்கியுள்ளார்.
இந்தியாவுடனான எங்களின் உறவு எப்போதும்போல் செழித்து வளரும் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன் – இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார குறிப்பிட்டுள்ளார்.