6 மாணவர்கள் மரணம்; அதிபர், ஆசிரியர் பிணையில் விடுவிப்பு!

0
25

காரைதீவு – மாவடிப்பள்ளி பாலத்தில் உழவியந்திரம் வெள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அரபுக் கல்லூரி மாணவர்கள் 06 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் அதிபர் மற்றும் ஆசிரியர் ஆகியோர் தலா இரண்டு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த 26 ஆம் திகதி பிற்பகல் மாணவர்களையும் இன்னும் சிலரையும் ஏற்றிக்கொண்டு சம்மாந்துறைக்கு சென்று கொண்டிருந்த உழவியந்திரம் மாவடிப்பள்ளி பாலத்தில் வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மாணவர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் அரபுக் கல்லூரியின் அதிபர், ஆசிரியர் மற்றும் 02 உதவியாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மத்ரஸாவின் அதிபர் மற்றும் ஆசிரியர் ஆகிய இருவரும் நேற்று 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்காக திங்கட்கிழமை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி கே. கருணாகரன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது அரபுக் கல்லூரியின் அதிபர் மற்றும் ஆசிரியர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.