திருக்கோவில் பிரதேச மீனவர்கள் திருக்கோவில் பிரதேச செயலாளருடன் பிரதேச செயலக வளாகத்தில் கலந்துரையாடலில் நேற்று ஈடுபட்டனர்.
திருக்கோவில் பிரதேச செயலகத்திற்கு வருகை தந்த மீனவ சங்க உறுப்பினர்கள் தங்களால் தொடர்ந்தும் மீன்பிடித் தொழிலை முன்னெடுக்க முடியாத நிலையில் மீனவ குடும்ப மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளை எதிர் கொண்டு வருவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலைமை தொடருமானால் திருக்கோவில் பிரதேச மீனவ குடும்பங்கள் பட்டினியை எதிர்கொள் வேண்டிய நிலை ஏற்படும் என்றும் உடனடியான ஏதாவது ஒரு முறையில் தமக்கான மண்ணெண்ணையை விரைவாக பெற்றுக் கொள்வதற்கு உதவி செய்யுமாறும் பிரதேச செயலாளர்
ரீ.கஜேந்திரனிடம் மீனவர்கள் மன்றாட்டமாக தமது கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளர் கருத்து தெரிவிக்கையில் தமது பிரதேசத்தில் ஒரே ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம் உள்ளதால் அதற்கு வழங்கப்படும் எரிபொருள் விநியோகத்தினை அதிகரித்து வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவ்வாறு வழங்கும் பட்சத்தில் எரிபொருள் பிரச்சினைக்கு ஓரளவு தீர்வினை வழங்க முடியும் எனவும் தெரிவித்து இருந்தார்.
சந்திப்பில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் நிருவாக உத்தியோகத்தர் ரீ.மோகனராஜா பிரதேச மீன்பிடி திணைக்கள உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.