களுத்துறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உரிய நேரத்தில் உரிய தீர்மானங்களை எடுக்காவிட்டால் கொழும்பு மாநகர சபைக்கு சமமான அல்லது அதனை விட பாரியளவிலான கொத்தணி உருவாகக் கூடிய அபாயம் உள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கப் பணிப்பாளர் மருத்துவர் ஹரித அளுத்கே இவ்வாறு எச்சரித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு: கொழும்பு மாநகர சபையை அண்மித்த பகுதிகளில் நூற்றுக்கு 19 சதவீதமானோருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் அட்டுலுகம பிரதேசத்தில் இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளில் நூற்றுக்கு 25 – 30 சதவீதமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவ்வாறான நிலையில் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளை 24 மணித்தியாலங்களில் பெற்றுக்கொள்ளக் கூடிய நிலைமை இன்னும் ஏற்படவில்லை. குறிப்பாக களுத்துறை மாவட்டத்தில் பண்டாரகம, வாதுவ உள்ளிட்ட பிரதேசங்களில் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் கிடைக்க 72 மணித்தியாலங்களை விட அதிக காலம் செல்கிறது.
நாளொன்றுக்கு இந்தப் பிரதேசத்தில் சுமார் 600 பரிசோதனைகளை முன்னெடுக்கும் போது அதன் முடிவுகளை 24 மணித்தியாலங்களுக்குள் வழங்க முடியும் என்றால்தான் அட்டுலுகம தொடர்பில் சரியான தீர்மானத்தை எடுக்க முடியும். மாறாக முடிவுகள் கிடைப்பதற்கு ஒரு வாரம் தாமதமானால் எவ்வாறு நிலைமையை முகாமைத்துவம் செய்வது?
இது இவ்வாறிருக்க மறுபுறம் இவ்வாறு அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் கூட களுத்துறையில் பிரத்தியேக ஆய்வு கூடமொன்று நிறுவப்படவில்லை. இதேபோன்று குருநாகல் மற்றும் கேகாலையிலும் ஆய்வு கூடங்கள் இல்லை.
குறைந்தபட்சம் கொழும்பு தேசிய மருத்துவமனையில் கூட ஆய்வுகூடமொன்று அமைக்கப்படவில்லை. இதேநிலைமை தொடருமானால் மேலும் பல கொத்தணிகள் உருவாகுவதைத் தவிர்க்க முடியாது எனத் தெரிவித்தார்.