நல்லூர் பலநோக்குக் கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையம் பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகளால் பழிவாங்கப்படுகிறதா??

0
390

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள நல்லூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன பிராந்திய அதிகாரிகளால் பழிவாங்கப்படுகின்றமை தொடர்பிலான அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 3 வாரங்களாக குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து எரிபொருள் மக்களுக்கு வழங்கப்படாமை தொடர்பில் ஊடகவியலாளர்களால் தகவல் சேகரிக்கப்பட்டது. இதன் போதே அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எரிபொருள் தட்டுப்பாடுகள் ஏற்படும் சூழ்நிலைகளில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பிராந்தியத்திற்கான உயர்மட்ட அதிகாரிகள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து சட்டவிரோதமாக எரிபொருளினை பெற்றுவந்திருக்கின்றனர்.

எரிபொருள் மக்களுக்கு பாரிய பிரச்சினையாக மாறிவரும் சூழலில் நல்லூர் பலநோக்குக்கூட்டுறவுச் சங்க அதிகாரிகள் குறித்த சட்டவிரோத எரிபொருள் வழங்கலுக்கு உடன்பட மறுத்துள்ளனர். குறித்த சம்பவம் கடந்த 20 நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்துள்ளது.

இதனை அடுத்து 3 வாரங்களைக் கடந்தும் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருளை அனுப்பாமல் பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகள் செயற்படுகின்றமை தொடர்பில் தெரியவந்துள்ளது.

மக்கள் நெரிசலாக வாழும் கல்வியங்காடு நகர் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெறுவதற்காக நல்லூர் உட்பட பல பகுதிகளையும் சேர்ந்த மக்கள் எரிபொருளுக்காக வருவது வாடிக்கையானது,

இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் காணப்படுகின்ற நிலையில் தனியாருக்குச் சொந்தமான மற்றைய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சில நாட்களுக்கு ஒருமுறை எரிபொருள் விநியோகம் இடம்பெறுவதாகவும் நல்லூர் பலநோக்குக்கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு 20 நாட்களாக எரிபொருள் வழங்கப்படவில்லை என்றும் பழிவாங்கும் செயற்பாடுகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டிருக்கின்றமை அதிர்ச்சி அளிப்பதாகவும் மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.