கனடாவில் நடைபெற்ற கொமன்வெல்த் அமைப்பின் 65-ஆவது நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்கான தீர்வு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.
இலங்கையிலுள்ள தமிழர்களின் பிரச்சனைகளுக்கான தீர்வுகளுக்கு உலக நாடுகளில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து எவ்வாறான அழுத்தங்களை பிரயோகிக்க முடியும் என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் விசேட கவனம் செலுத்தினார்.
500 இற்கும் அதிகமான பல்வேறு நாடுகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பல்வேறு நாடுகளின் தமிழ் அரசியல்வாதிகளை சந்தித்து பேசியிருந்தார்.
மலேசியத் தமிழர்கள், இலங்கை தமிழர்களின் பிரச்சனையில் எவ்வாறு தலையிட முடியும் என்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
கொமன்வெல்த் அமைப்பின் 65-ஆவது நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இலங்கையினை பிரதிநிதித்துவப்படுத்தி சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர்களான காமினி லொகுகே, சி.பி ரத்னாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோகினி கவிரத்ன, இரா.சாணக்கியன் மற்றும் நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.