மன்னார் தீவு பகுதியில் இடம்பெறும் கனிய மண் அகழ்வு மற்றும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இடம் பெற்றது.
போராட்டத்தில் மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதோடு, மீனவ அமைப்புகள்,
பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சர்வமத தலைவர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உப தலைவர்கள், உறுப்பினர்கள் ,மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மதியம் 12 மணி வரை பஜார் பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டதோடு, தனியார் போக்குவரத்து சேவைகளும் இடை நிறுத்தப்பட்டிருந்தன.
மன்னார் தீவு பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கனிய வள மண் அகழ்வு மற்றும் உயர் வலு கொண்ட காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கும் நடவடிக்கைகளினால் மக்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனிய மணல் அகழ்வினால் எதிர் காலத்தில் மன்னார் தீவு பகுதியில் பல்வேறு அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலை ஏற்பட உள்ளதோடு,காற்றாலை மின் உற்பத்தியால் மீனவர்களின் வாழ்வாதாரம் எதிர் காலத்தில் முழுமையாக பாதிக்கப்படும் என மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே இந்த நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்தக்கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தை தொடர்ந்து கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் ஆகிய வற்றிற்கு எதிராக மக்களிடம் கையெழுத்து பெற்று கொள்ளப்பட்டு,ஜனாதிபதிக்கு மகஜர் கையளிக்கும் வகையில் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.