பண்டாரகம கெஸ்பேவ வீதியில் அலோதியாவ பிரதேசத்தில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி உயர் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சாரதி உட்பட நான்கு பேர் படுகாயமடைந்ததுடன் அவர்கள் அனைவரும் 1990 சுவசெரிய அம்பியூலன்ஸ் மூலம் பண்டாரகம மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தான நிகழ்வொன்றில் கலந்து கொண்ட சிலரை அழைத்துக் கொண்டு பண்டாரகமவில் இருந்து கெஸ்பேவ நோக்கி சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த கார் மோதியதில் உயர் மின் கம்பம் பல பகுதிகளாக உடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் மோட்டார் வாகனம் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரையே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் காரணமாக பல பாகங்களாக உடைந்த மின்கம்பத்தை அகற்றி அதனை சீரமைக்கும் பராமரிப்பு பணிகள் காரணமாக பண்டாரகம வெல்மில்ல பிரதேசத்தில் பல மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டது.