திருகோணமலை கடல் பிராந்தியத்தில் சிறு படகுகள் மூலம் மீன்பிடியில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் தாம் அரசாங்கத்தினால் பல வகைகளிலும் புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்து மகஜர் ஒன்றில் கையெழுத்திடும் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
அகில இலங்கை பொது மீனவர்கள் சம்மேளனத்தால் திருகோணமலை மணிக்கூட்டு கோபுர சந்தியில் கையெழுத்திடும் வேலைத்திடும் வேலைத்திட்டம் நடைபெற்றது.
திருகோணமலை கடற் பகுதிகளில் சிறு படகுகள் மூலம் மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வருபவர்களுக்காக ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் மாதாந்தம் 15,000 ரூபா வீதம் 3 மாதங்களுகான கொடுப்பனவு மானியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட போதும் குறித்த கொடுப்பனவானது சில காரணங்களின் நிமித்தம் இன்னமும் பலருக்கு வழங்கப்படவில்லை என்பதனை மேற்கோள்காட்டி மகஜரில் கையெழுத்திடும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
குறிப்பாக திருகோணமலை மாவட்ட மீன்பிடித் திணைக்களத்தினால் இயந்திரம் இல்லா படகுகளில் மீன்பிடிப்பவர்கள் பட்டியலில் 1758 மீனவர்களது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்த போதிலும் 783 மீனவர்களுக்கு மாத்திரமே குறித்த தொகையானது வழங்கப்பட்டிருப்பதாகவும் மீனவர்கள் குறிப்பிட்டனர்.
மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை வெளிக்கொண்டு வரும் விதமாக குறித்த கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையெழுத்திடப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எனவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.