யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் கலைவாரம், நான்கு வருடங்களின் பின்னர் மீள இவ்வருடம் வெகு விமர்சையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுடைய கலை கலாசார பண்பாட்டு விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் முகமாக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினால் குறித்த நிகழ்வு நடாத்தப்படுகிறது. கலைவார ஏற்பாட்டு குழுவின் தலைவர் ஜெயராசா ஜனீபன் தலைமையில் யாழ் பல்கலைக்கழக பரமேஸ்வரா ஆலய முன்றலில் சமய ரீதியான அனுஷ்டானங்களுடன் நிகழ்வு நேற்று ஆரம்பமானது. தமிழர்களின் பூர்விக கலைகளான மயிலாட்டம், பொம்மலாட்டம், பறையிசை ஆகிய கலை வடிவங்களை தாங்கிய வண்ணம் நிகழ்வுகள் இடம்பெற்றன. கலைவார ஏற்பாட்டு குழுவினருக்கும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களிற்கும் இடையில் மென்பாந்தட்ட சுற்றுப்போட்டியும் இடம்பெற்றது. வெற்றியீட்டிய கலைவார ஏற்பாட்டு குழு அணியினருக்கு கலைப்பீடாதிபதி எஸ்.ரகுராம் வெற்றிக்கிண்ணத்தை வழங்கி வைத்தார். நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக பிரதிப்பதிவாளர் அனுசியா, கலைப்பீட பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர்;, யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர், கலைப்பீட மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர். தொடர்சியாக ஒருவாரம் மாணவர்களிடையே கலை கலாச்சார பண்பாட்டு விளையாட்டு சார் போட்டிகள் நடத்தப்பட்டு எதிர்வரும் 23ஆம் திகதி மாலை கைலாசபதி கலையரங்கில் மாபெரும் கலைநிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.