கிளிநொச்சி மாவட்டத்தில், இடப்பெயர்வுகள் மற்றும் மீள்குடியமர்வின் பின்னரான செயற்பாடுகளில், அதிகளவில், காணிப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாக, மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று, கிளிநொச்சியில் இடம்பெற்ற, அரச காணிகள் தொடர்பான இலவச சட்ட உதவி நடமாடும் சேவையில் பங்கேற்ற வேளை, இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்கள், இந்து மகா சபை ஏற்பாட்டிலான, அரச காணிகள் தொடர்பான, இலவச சட்ட உதவி முகாம், இன்று பகல், கிளிநொச்சி மாவட்ட திறன் விருத்தி மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், பிரதம அதிதியாக பங்கேற்று, சட்ட ஆலோசனைகள் தொடர்பான இலவச முகாமை ஆரம்பித்து வைத்தார்.
தொடர்ந்து, சட்டக் கல்லூரி மாணவர்களால், அரச அதிபருக்கான நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், கரைச்சி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி பாரதி, சட்டவரைஞர் திணைக்கள பிரதி சட்டவரைஞர் செல்வ குணபாலன், இந்து மகா சபையின் சட்ட மாணவர்கள் மற்றும் பொது மக்கள் என பலர் பங்கேற்றனர்.