வவுனியாவில் மரதனோட்டமும், நூறு பானை பொங்கலும்!

0
283

வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கனகராயன்குளம் மகாவித்தியாலயம் இந்த ஆண்டு நூறாவது ஆண்டில் கால் பதிக்கிறது.

அந்தவகையில் நூற்றாண்டு விழாவை பாரிய அளவில் கொண்டாட பாடசாலை சமூகம் ஏற்பாடுகளை செய்துவருகிறது.

நூற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு போட்டி நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளனர்.

அதன் ஒரு அங்கமாக நேற்றையதினம் மாபெரும் மரதனோட்டப் போட்டியும், நூறு பானைகளில் பொங்கல் பொங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

நேற்றுக் காலை பன்றிக்கெய்தகுளம் சந்தியிலிருந்து மரதனோட்டப் போட்டியை, பாடசாலை முன்னாள் அதிபர் ச.பத்மநாதன் கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார்.

குறித்த போட்டியானது ஏ-9 வீதி வழியாகச் சென்று கனகராயன்குளம் மகாவித்தியாலய முன்றலில் நிறைவடைந்தது.

15 கிலோ மீற்றம் தூரம் கொண்ட இந்த போட்டியில் வவுனியா பூம்புகார் கண்ணகி வித்தியாலய மாணவன் பா.விழிவண்ணன் முதலாமிடத்தையும், வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவன் ர.பிரசாந் இரண்டாமிடத்தையும், வவுனியா சின்னடம்பன் பாரதி வித்தியாலய மாணவன் ச.கபிலன் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து பாடசாலை வளாகத்தில் நூறு பானைகளில் பொங்கல் பொங்கி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில் பாடசாலை அதிபர் முன்னை நாள் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், பாடசாலை பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக மாபெரும் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி ஒன்றினையும் செய்யவுள்ளதாக, பாடசாலை சமூகத்தினர் அறிவித்துள்ளனர்.