காலி முகத்திடல் போராட்டத்திற்கு பின்னர் புத்தசாசனத்திற்கு எதிரான கருத்துக்கள் தீவிரம்: சரத் வீரசேகர

0
195

பௌத்த மதத்தை அவமதித்து விட்டு பின்னர் மன்னிப்பு கோருவது தற்போது பழக்கமாகி விட்டது எனவும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் திட்டமிட்ட வகையில் புத்த சாசனத்திற்கு எதிரான செயற்பாடுகள் நாட்டில் முன்னெடுக்கப்படுகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

‘இலங்கை சிங்கள பௌத்த நாடு என்ற காரணத்தினால் தான் புத்தசாசனத்திற்கு எதிராக கருத்துரைப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். பிற நாடுகளில் இவ்வாறான தன்மை கிடையாது. உயிருடனும் வாழ முடியாது. பௌத்த மதத்திற்கும், புத்த சாசனத்திற்கும் எதிரான கருத்துக்களை ஒருதரப்பினர் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கிறார்கள். பகிரங்கமான முறையில் மதக் கோட்பாடுகளை அவமதித்துவிட்டு பின்னர் சமூக வலைத்தளங்கள் ஊடாக மன்னிப்பு கோருகிறார்கள். இது தற்போது பழக்கமாகிவிட்டது. காலி முகத்திடல் போராட்டத்துக்கு பின்னரே புத்தசாசனத்துக்கு எதிரான கருத்துக்கள் தீவிரமடைந்துள்ளன.
காலி முகத்திடலில் கடந்த ஆண்டு கொண்டாடப்பட்ட வெசாக், பொசன் உற்சவத்தில் கறுப்பு நிறத்தில் தோரணங்கள், பந்தல்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளின் விளைவே தற்போது வெளிப்படுகின்றன. அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள பேச்சு சுதந்திரத்தை ஒரு தரப்பினர் தவறாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் திட்டமிட்ட வகையில் புத்தசாசனத்திற்கு எதிரான செயற்பாடுகள் நாட்டில் முன்னெடுக்கப்படுகின்றன. மதங்களை முன்னிலைப்படுத்தி குறிப்பிடப்படும் கருத்துக்கள் தொடர்பில் தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற தெரிவு குழு ஊடாக விசேட தீர்மானங்களை எடுக்க தீர்மானித்துள்ளோம். கடுமையான தீர்மானங்களை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்’ என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.