யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளைஞன் ஒருவர் வீடொன்றிற்கு அருகில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில், வீட்டின் உரிமையாளர் மீது இனம் தெரியாத நபர்கள் வாள் வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பருத்தித்துறை 3ஆம் குறுக்கு தெருவை சேர்ந்த 50 வயதுடைய சுப்பிரமணியம் சுகுமார் என்பவர் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பருத்தித்துறை இரண்டாம் குறுக்கு தெருவை சேர்ந்த தியாகராசா சந்திரதாஸ் என்ற இளைஞன், கடந்த 28ஆம் திகதி மூன்றாம் குறுக்கு தெருவில் உள்ள சுகுமார் என்பவரின் வீட்டுக்கு வெளியே அதிகாலை வேளை சடலமாக மீட்கப்பட்டார்.
இந்நிலையில் சுகுமாரின் வீட்டினுள், அத்துமீறி நுழைந்த மூவர் கொண்ட குழு, சுகுமார் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
உயிரிழந்த இளைஞன் இரவு நேரம் எதற்காக அந்த வீட்டுக்கு அருகில் சென்றார் என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பருத்தித்துறை பொலிஸார், இந்த தாக்குதல் சம்பவம் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.